Sunday, December 30, 2007

இலெமூரியாவும் தமிழ்நாடும்

இதுகாறும் இலெமூரியர்களைப் பற்றி வரைந்த குறிப்புகளால் இலெமூரியாவிற்கும் தமிழ்நாட்டிற்குமுள்ள இன்றியமையாத் தொடர்புகள் எளிதில் விளங்கத் தக்கவையேயாயினும், முடிவுரையாக ஈண்டு அவற்றைத் தொகுத்துக் கூறுகிறோம்.

முதன் முதலாகத் தமிழ் நூல்களின் பழைமையும் தமிழ் நூல்களிற் குறிப்பிட்டுள்ள முச்சங்கங்களின் பழைமையும், வடமொழி நூலாகிய வான்மீகரது இராமாயணத்தாலும், புராணங்களாலும் நன்கு வலியுறுத்தப்படுகின்றமையோடு தற்கால ஆராய்ச்சி நூல்களான ஞால நூல், நில நூல், ஆவிமண்டல நூல் முதலியவற்றுடன் முற்றும் பொருத்தமுடையன என்றும் காட்டப்பட்டது.

உலகின் மிகப் பழைமையான நிலப்பகுதி இலெமூரியாவே என்பதும், தமிழ் நூல்களில் கூறப்பட்ட குமரிக் கண்டம் அந்த இலெமூரியாகவோ அல்லது அதன் பகுதியாகவோ இருக்க வேண்டும் என்பதும், அந்த இலெமூரியாவுக்கே சிறப்பாகக் கூறப்படும் பாறை வகைகளும், செடி கொடி இனங்களும், ஊர்வன, பறப்பன, நடப்பனவாகிய உயிரினங்களும் தமிழ்நாட்டில் இன்றும் உள்ளன என்பதும் அந் நூல்கள் நமக்கு எடுத்துக் கூறும் உண்மைகளாகும்.

இவையேயன்றி, இலெமூரியர் நாகரிகம், சமயம், ஒழுக்கநிலை முதலியவற்றைப் பற்றி நாம் எடுத்துக் கூறியவற்றுள்ளும் எத்தனையோ செய்திகள் இன்றைய உலகில் தமிழ்நாட்டினர்க்கே சிறப்பாக உரியவை என்பது போதரும். அவற்றுள் குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே இங்கே விதந்துரைக்க எண்ணுகிறோம்.

இலெமூரிய மக்களுக்கு நெற்றியில் கண்போன்ற ஓர் உறுப்பு உண்டு என்பது தற்காலத்தவர்க்கு எவ்வளவோ புதுமையான, நம்புதற்கரிதான செய்தியாயினும், தமிழர் தெய்வங்களின், அவற்றிலும் சிறப்பாகச் சைவசமயச் சார்பான சிவன், பிள்ளையார், முருகன், காளி ஆகிய பழந்தமிழ்த் தெய்வங்களின் உருவ அமைப்புக்களுள்ளும் இதே உண்மை வலியுறுத்திக் கூறப்படுவது உற்று நோக்கத் தக்கது. (இத் தெய்வங்களின் முகங்கள் ஐந்து, ஆறு என மாறியவிடத்துங்கூட இம் மூன்றாவது கண் அல்லது நெற்றிக்கண் இன்றியமையாயது வேண்டப்படுவது காண்க.)

இக் கண்ணின் இயல்பை நோக்க இவ் வியைபு இன்னும் நுட்பமானது என்பது காணலாம். ஐம்புலன்களிலும் சிறப்புடையது கண் ஆதலின், இவ்வுறுப்பு நெற்றிக்கண் என்று பெயர் கொண்டதாயினும், உண்மையில் இது கண்ணோ, அல்லது ஐம்புலன்களுள் ஒன்றோ அன்று; அவ் வைம்புலன்களையும் உள்ளடக்கி, அவற்றிற்கும் அப்பாற்பட்ட ஓர் ஆறாம் அறிவின்பாற்பட்டது. (தொல்காப்பியர் இத்தகைய ஆறாம் அறிவு தெய்வப் பிறவிக்கேயன்றி மக்கட் பிறவிக்கும் இன்றியமையாப் பண்பாகக் கூறினார்.)

இவ்வறிவைப் பற்றிய கருத்துத் தமிழரிடை வெறுங் கட்டுக்கதையோ புனைந்துரையோ அன்று. அடிப்படையான இன்றியமையாத பழைய உண்மையே என்பது அதற்கெனத் தமிழில் வேறெம் மொழியிலும் இல்லாத ஒரு தனிப்பட்ட நுண்கருத்துடைய சொல் இருப்பதனால் அறியலாம். "அதுவே, 'உ' என்ற மூன்றாம் கட்டு ஆகும். இஃது இம்மூன்றாம் கண்ணாற் காணப்படும் பொருள்களை - அஃதாவது பருப்பொருள்களுள் மற்ற இரு கண்களுக்கும் மறைந்தவற்றையும் (பின் உள்ளது, மேல் உள்ளது, தொலையிடத்தும் முக்காலத்தும் உள்ளது ஆகியவற்றையும்) நுண்பொருள்களையும் குறிப்பது என்பது யாவரும் அறிந்ததே.

இரண்டாவதாக, இறந்தவரை உடலழியாமல் தாழியில் அடக்கிவைப்பது இலெமூரியர், எகிப்தியர் தமிழர் ஆகிய மூவர்க்கு மட்டுமே சிறப்பான பண்பாம்.இஃதன்றி, இலெமூரியரிடை வழங்கிய உடலினின்று உயிரைப் பிரிக்கும் முறையையும், உடலை நீண்டநாள் கெடாது வைத்திருக்கும் முறையையும் நோக்குவோர் தமிழரிடை வழக்காற்றிலிருந்த 'வடக்கிருத்தலையும்' சித்தர் காயகற்ப முறையையும் எண்ணாதிருக்க முடியாது.

இலெமூரியரிடையேயும், தமிழரிடையேயும் பெண்கள் அடைந்திருந்த உயர்வு அதனைப் பற்றிப் பறைசாற்றி வரும் இந்நாளைய மேல்நாட்டினரிடையேகூட இல்லை எனல் மிகையாகாது. (தமிழ் நாட்டில் பெண்கள் ஔவையார் முதலிய தனிப்பெரும் புலவராகவும், மங்கையர்க்கரசி போன்ற அரசியல் தலைவராகவும், திலகவதியார், சூடிக்கொடுத்த நாச்சியார், முதலியோர் போன்ற சமயத் தலைவராகவும் இருந்தனர்.)

இவ் வகையில் இன்னொரு சுவை தரும் பொது உண்மை உளது. உலகின் மற்றெல்லா வகை மக்களிடையேயும் உலகின் முழுமுதற் பொருள் ஆண்பாற் சார்புடையதாகவே கொள்ளப்பட்டிருக்க, மேற்கூறிய (இலெமூரியர், எகிப்தியர், தமிழர் ஆகிய) மூவரிடை மட்டும் அது பெண்பாற் பொருளாகத் தாயுருவிலும் வழிபடப்படுகிறது. சைவரிடை அம்முழுமுதற் பொருள் இன்னும் அம்மையப்பருருவில் இருபாலும் ஒருபாலாக வணங்கப்படுதல் காண்க.

இயற்கையை இலெமூரியர் இக்காலத்தவரை விடப் பன்மடங்கு மிகுதியாக அறிந்திருந்தும் அதனைத் தந்நலத்திற்காகவோ உலக அழிவிற்காகாவோ பயன்படுத்தாமல் ஆக்கமுறையிற் பொது நலத்திற்காக மட்டுமே பயன்படுத்தியதை ஒருபுறமும், கிட்டத்தட்ட அதே முறையில் அமைந்துள்ள சித்தர் முறையை மற்றொரு புறமும் ஒப்பிட்டு நோக்குபவர்க்கு அவ்விலெமூரியரில் மீந்து நின்றவரே சித்தராயினரோ என்ற ஐயம் எழாதிராது.

இன்னொரு சுவை தரும் பொதுமைப் பண்பு இலெமூரியரிடையவும், இன்றுவரை பழந்தமிழரான மலையாளத்தாரிடையும், கிழக்கிந்தியத் தீவுகள், பலித்தீவுகள் முதலியவற்றிலுள்ள மக்களிடையும் காணப்படும் தாய்வழி உரிமையாம். இன்றும் இவ்வுரிமையைக் குறிக்கும் தாயம் என்ற பழந்தமிழ்ச் சொல் வடமொழிச் சட்ட நூல்வரை சென்று 'தாய பாகம்' என வழங்குதல் காண்க.

இன்னும் வாழ்க்கை அமைதி, சமயக் கொள்கை, கோயிலமைப்பு, ஒழுக்கநிலை முதலிய பலவகைகளிலும் கூடப் பழந்தமிழர் இலெமூரியரையும், எகிப்தியரையும், அமெரிக்கமய நாகரிக மக்களையும் பல நுண்ணிய செய்திகளில் ஒத்திருக்கின்றமை காணலாம். தமிழ்ச் சித்தர் நூல்களை நுணுகி ஆய்வோர்க்கு இன்னும் பலப்பல ஒப்புமைகள் புலப்படக்கூடும் என்றும் நாம் நம்புகிறோம்.

இலெமூரியாவின் கல்வெட்டுக்களிலும், வட இந்தியாவில் சிந்து ஆற்றுப் பக்கமுள்ள கல்வெட்டுக்களிலும் காணப்படும் எழுத்துக்கள் மொழிகள் முதலியவை தெளிவுபெறப் பொருள் கொள்ளப்பட்டால் தமிழரைப் பற்றிய பல புதைப்பட்ட உண்மைகள் விளங்கலாம். தமிழர் முன்னேற்றத்திற்கு இஃது ஒரு முதற்படியாக உதவும்.

9. தற்கால நாகரிகமும் இலெமூரியரும்

உலகியலறிஞர், உள்ள நிலைகளில் மூவகைப் பாகுபாட்டைப் பிரித்தறிகின்றனர். முதலாவது அறிவுப் பகுதி அல்லது உணர்வுநிலை; இரண்டாவது உணர்ச்சிப் பகுதி அல்லது அரை உணர்வுநிலை; மூன்றாவது உணர்வின்மை நிலை. இவற்றையே தமிழ்நூல் வல்லார், நனாநிலை, கனாநிலை, சுழுத்தி நிலை எனக் கூறுவர்.

இவற்றுள் தற்கால மாந்தர் உணர்ச்சியினின்று விடுதலை பெற்று, அறிவினாலேயே உயர்வுபெற்று வருகின்றனர். இவ்வறிவை நன்கு பயன்படுத்தக் கற்குமுன் பிற விலங்கினங்களைப் போன்று மனிதனும் உணர்ச்சியினாலேயே எல்லாக் காரியங்களையும் செய்திருக்க வேண்டும்.

ஆசிரியர் ஸ்காட் எலியட், ருடால்ப் ஸ்டைனர் முதலியோர் தமது மனிதத் தோற்றக் கொள்கைக்கிணங்க, முதல் இரண்டு நில ஆக்க இயல்காலப் பகுதிகளிலும் இருந்த மக்கள் உடம்பே அற்ற மூன்றாவது கழுத்திநிலையை ஒட்டிய முந்திய கற்பத்து உயிர்கள் என்றும், மூன்றாங் காலத்தைச் சார்ந்த இலெமூரிய மக்கள் உணர்ச்சியையே முழு ஆற்றலாகக் கொண்டவர் என்றும், அவ்வுணர்ச்சி தற்கால மனிதரைவிட அவர்களிடம் கூடுதலாக இயற்கையாகவே அமைந்திருந்தபடியால் தற்காலத்தவரால் செய்வதற்கு அரிய சில செய்கைகளையும் உணர்ச்சியின் உதவியால் செய்தனர் என்றும், அதன்பின் நான்காம் காலத்திலிருந்த அத்லாந்தியர் அறிவைப் பயன்படுத்தினும் அதனைத் தன்னல முறையில் ஆற்றியதால் அழிந்தனர் என்றும், ஐந்தாம் காலத்தவராகிய தற்கால ஐரோப்பியர் அறிவை நன்முறையில் பயன்படுத்த முயல்கின்றனர் என்றும் மனித வளர்ச்சிபற்றிக் கூறுகின்றனர்.

இன்னும், முதன் முதல் பால் பாகுபாடு ஏற்பட்டது கூட இலெமூரியாவிலேயே என்றும், எழுத்தும் பேச்சும் அதற்குப் பிந்தி ஏற்பட்டதே என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், ஆசிரியர் எஸ்.கார்வே காலிபோர்னியாவிலும் பிற இடங்களிலும் கண்ட சான்றுகளால் இத்தகைய புனைவியல் தடுமாற்றங்களுக்கு இடமில்லாமல் செய்து விட்டனர். இலெமூரியர் எழுத்து வாசனையுடையவர். பேசத்தெரிந்தவரேயாயினும், பேச்சின்றிக் கருத்து மாற்றும் ஆற்றலும் உடையவர் என்றும், இவற்றின் உதவியால் தற்கால ம்னிதரைவிட அறிவியற் கலை, கருவியாற்றல், நாகரிகம் ஆகிய பகுதிகளில் பல வழியில் முன்னேறியவர் என்றும் கொள்கிறார்.

முன்கூறிய ஆசிரியர்கள் தடுமாற்றங்களுக்குக் காரணம் அவர்கள் தாம் கண்கூடாகக் கண்ட அறிவியல் உண்மைகளையும் தமது சமயக் கருத்துக்கு ஒப்பத் திருத்தி அமைக்க முயல்வதனாலேயே என முன்னர்க் கூறினோம்.

அறிவியல் முறைப்படி வரலாற்றாராய்ச்சி வழியில் அவர்களைப் பின்பற்றிச் சென்று பார்த்தால் இலெமூரிய நாகரிகம் மனிதரின் மிகப் பழைமையான நாகரிகம் என்பதும், நெடுநாள் வளர்ச்சியால் சிலவகைகளில் தற்கால நாகரிகத்துக்கு ஒப்பாகவோ மிகையாகவோ காணப்படினும் பலவகைகளில் அதன் பழங்காலத்தைக் குறிக்கும் குறைபாடுகளில்லாதது அன்று என்பதும் அதற்குப் பின்னும், அத்லாந்திய நாகரிகத்திற்குப் பின்னும், மற்றும் அடிக்கடி வேறு காலங்களிலும் மனித நாகரிக வளர்ச்சியில் உயர்வு தாழ்வுகளும், மாற்றங்களும், அழிவுகளும், புது வளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன என்பதும் தெளிவாகக் காணப்படுகின்றன.

தற்கால (அஃதாவது, சிறப்பாக மேல்நாட்டு) நாகரிகத்தைவிட இலெமூரியர் சிறந்து விளங்கிய பகுதி அவர்களது வாழ்க்கை அமைதியிலேயே, அவ்வுயர்வு உண்மையில் இலெமூரியருக்கு மட்டுமன்று; பிற்போக்கு உடையவை என்று மேல்நாட்டாராற் கருதப்படும் பழைய கீழ்நாட்டு நாகரிகங்கள் அனைத்திற்கும் பொதுவானதேயாகும். தற்கால மேல்நாட்டு நாகரிகத்தின் தன்னலமும், போட்டியுணர்ச்சியும், அழிவாற்றலும் மேம்பாடுபோலத் தோற்றினும் அவை அந்நாகரிகத்தின் அடிப்படையையே அழிக்கும் பெருந் தீங்குகளாகும்.

இலெமூரியரது வாழ்க்கையமைதிக்கேற்ப, இலெமூரியரின் சமய உணர்ச்சி நடுநிலையும், நேர்மையும் உடையது. இன்று உலகில் காணப்படும் கடவுள் மறுப்புணர்ச்சியும் அவர்களிடையில்லை. அதற்கு மாறாக கீழ்நாட்டாரிடை அடிக்கடி காணப்படுகின்ற கடவுள் பேராற் காட்டப்படும் வெறியும் அங்கில்லை. போலி உணர்ச்சியோ மருந்திற்கும் இருந்ததில்லை. சமயம், அவர்கள் வாழ்க்கையோடு சேர்ந்த ஒரு வாழ்க்கை அமைதி. தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும், இன்னும் சிறப்பாகச் சிலப்பதிகாரத்திலும் இத்தகைய சமய அமைதியை நாம் காணலாம்.

வாழ்க்கையிலும் இலெமூரியரிடைப் பொருளற்ற போட்டியில்லை. அதற்கான விரைவும் இல்லை. மாலையில் உலாவப் போகிறவர்கள் அதற்காகக் கடற்கரை செல்ல 60 கல் விரைவில் ஊர்தியில் செல்கின்ற புதுமை இக்காலத்தது. ஒரு நாட்டில் மக்கள் முற்றிலும் கைத்தொழிலே செய்து அத்தொழிற் பயனாகிய பொருள்களை அடுத்த நாட்டார் வாங்க வேண்டுமென்று வற்புறுத்துவதும், நெடுந்தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை மாற்றாக வாங்குவதும் இதை வகைப்பட்ட குழப்பத்தைச் சார்ந்ததே. இலெமூரியரது வாழ்க்கை, இதிலும் கீழ்நாட்டாரது வாழ்க்கையையே போன்றதாகும்.

அறிவியல் கலைவகைகளில் எல்லாத் துறைகளிலும் இன்றைய மேல்நாட்டறிவுக்கு இலெமூரியர் அறிவு ஒப்பாக மாட்டாது. ஆனால், அவர்கள் குறைபாடு பெரிதும் அழிவுத்துறை பற்றியது என்பதும் உயர்வு ஆக்கத்துறை பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கவை. வீடு நகரம் முதலியவற்றின் அமைப்புகளிலும் உடை வகையிலும் உணவு வகையிலும் அவர்கள் உடல் நலத்தையும் இன்பத்தையும் போற்றினரேயன்றிப் பகட்டையும் ஆரவாரத்தையும் பாராட்டவில்லை.

இந்த அடிப்படையான உயர்நிலை (ஆன்மிக) உண்மையை விட்டு விட்டுத் தற்கால அறிவியல் நோக்குப்படி பார்த்தாற்கூட இலெமூரியர் சில வகைகளில் தற்கால மக்களைவிட முற்போக்கானவர் என்று தெரிகின்றது. இதற்கு நாம் முற்கூறிய செய்தியோடு கூட அவர்களது நெடுங்கால நடைமுறையறிவும் ஒரு காரணமாகும். நமது தற்கால மேல்நாட்டு நாகரிகம் சில நூற்றாண்டுகளே பழைமையுடையது. அதற்கு அடிப்படையாயிருந்த கிரேக்க உரோம நாகரிகங்கள் கூட இரண்டு மூன்று ஆயிர ஆண்டுகளுக்கு முந்தியவையல்ல. இந்த அளாவில்கூட இந்நாகரிகம் முழுத் தன்னாட்சி (சுதந்தரம்) உடையதன்று. ஏனெனில் இலெமூரிய நாகரிகத்தின் கிளைகளாகிய இந்திய நாகரிகம், செமித்திய நாகரிகம் இவற்றின் பல பகுதிகளை அது பல காலங்களில் தன்னுள் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு மாறாக, இலெமூரிய நாகரிகம் தன்னாட்சியுடன் ஒரு நூறாயிர ஆண்டு முதல் இரண்டு நூறாயிர ஆண்டு வரையிற் பயின்றதொன்றாகும்.

இந் நடைமுறையறிவால் தற்காலத்தவருக்குத் தெரியாத பல மூலப்பொருள்களும்(Elements), கருப்பொருள்களும்(Minerals), ஒண்பொருள்களும்(Metals) அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றுள் நீரை விலக்கும் ஆற்றல் வாய்ந்த கல் ஒன்றும், பேரொளிகள் தரும் ஆற்றலுடைய ரேடியம் என்றதற்கான புதிய ஒண்பொருளோ ஒன்றும், தற்காலப் பூச்சுமண்ணை(cement)ப் போல் மண்ணை உறுதி செய்யக் கூடிய வெண் கற்பொடி ஒன்றும் தலைமையானவை என்று முன்னர்க் கூறியுள்ளோம்.

இவற்றின் உதவியால் அவர்கள் பலவகை ஊர்திகளும், வான ஊர்திகளும், உறுதியான பாதைகளும் அமைத்தனர். மூலப் பொருள்களின் அறிவாலும், பொருள்களின் ஒப்பநிலை(Balance)அறிவாலும், மரக்கட்டைகளைப் பாதுகாத்து வைக்கும் அறிவாலும், அவர்கள் 30,000 ஆண்டளவும் அழியாத கட்டிடங்களும் கோவில்களும் நிறுவினர். அவர்களது ஒளியறிவு மிகுதியால் தற்காலத்தவரால் வியக்கத்தக்க வண்ணம் பல நூறு கல் தொலைவரை ஒளிவீசும் விளக்கங்களை அவர்கள் உண்டு பண்ணி இரவைப் பகலாகச் செய்திருந்தனராம். கலைகளிலும் ஓவியத்திலும் மற்றும் அவர்களது திறன் தற்காலத்தவர் அழுக்காறடையத்தக்கதாகவே இருந்தது.

ஆனால், இத்தனை திறனும் மனித ஆக்கத் துறையில் சென்றதேயன்றி அழிவுத் துறையில் செல்லவில்லை; அத்லாந்திய(Atlantis) நாகரிக காலத்திலும், அதன்பின் செமித்தியர் நாளிலும் மக்கள் ஒருவரோடு ஒருவர் போர்த் திறங்காட்டி அழிவு செய்தபடி அவர்கள் செய்யவுமில்லை. செய்ய முயலவுமில்லை. தம்மைச் சுற்றியுள்ள பெரிய விலங்கினங்கள் பாம்புகள் இவற்றிலிருந்துகூட அவர்கள் தப்பி ஒதுங்கி நிறக் முயன்றனரேயன்றி அவற்றை அழிவு செய்ய முற்பட்டதாகத் தெரியவில்லை.

அழிவுத் திறம் மிகுந்த நாகரிக காலங்களிலேதான் கோட்டை கொத்தளங்களும், பெரு நகரங்களும் மிகுந்திருக்கும். அத்லாந்திய நாகரிகம் இத்தகையதே. ஆனால், இலெமூரியாவில் வீடுகளும் ஊர்களும் மனித வாழ்க்கை நலமொன்றையே நோக்கமாகக் கொண்டு, தற்கால மலையாள நாட்டு வீடுகளைப் போன்று, இடைவெளிகளும் சோலைகளும் விட்டுக் கட்டப்பட்டவையேயாகும். ஆங்காங்குள்ள சில நகரங்களும் வாணிபத் துறைகள் அல்லது தொழில் துறைகளாகவே அமைந்திருந்தன.

இன்று இலெமூரியர் நாகரிகத்தைப் பற்றி நாம் அறிய உதவும் கட்டிடங்கள் அவர்கள் கோயில்கள் மட்டுமேயாகும். அவர்கள் ஊர்களும் வீடுகளும் இன்றைய ஜப்பானியர் வீடுகளைப் போல் எரிமலை, நில அதிர்ச்சி முதலியவை காரணமாக அழியும் பொருள்களாலேயே கட்டப்பட்டன. இலெமூரியர் உலகியல் வாழ்வில் பற்றுக் குறைந்திருந்ததும் இதற்கு இன்னொரு காரணம். தமிழரும் இதே கருத்துடையர் என்படைத் தமிழ் மூதாட்டியர் "இடம்பட வீடெடேல்" என்று கூறியிருப்பதனால் அறிக.

இலெமூரிய மக்களது நாகரிகம்

மேலே நாம் குறிப்பிட்டபடி, இலெமூரியர்களே முதல் மனிதர்கள் என்ற தப்பெண்ணத்தின் பயனாகவேதான் இப்பழ்ங்கண்டத்திற்கு அறிஞர் முதலில் இலெமூரியா என்ற பெயரைக் கொடுத்தனர். மனித வகுப்பின் முன்மாதிரி எனக் கருதப்பட்ட இலெமூர்களின் உறைவிடம் என்பது இதன் பொருள். இக்கருத்துப் பிழைபாடுடையதென்றும் அந்நாளைய மக்களின் ஏடுகளில் இந்நாடு "மூ"வின் "தாய் நிலம்" என்று வழங்கி வந்ததென்றும் ஆசிரியர் கார்வே கூறுகிறார்.

இலெமூரிய மக்கள் தற்கால மக்களைவிடப் பெரிதும் நெட்டையானவர்களே. ஆறடிக்கு மேற்பட்டு ஏழடி வரையிலும் அவர்கள் உயர்ந்திருந்தனர். அவர்கள் உடலின் எடை 160 கல் முதல் 200 கல் வரை என்று கூறப்படுகிறது.

அவர்களுடைய கைகள் இன்றைய மனிதனின் கைகளைவிட நீண்டவையாகவும், பெரியவையாகவும், சதைப்பற்று மிக்கவையாயும் இருந்தன. கால்கள் இதற்கொத்து நீட்சிபெறாமல் திரட்சியுடையவையாய் இருந்தன.

தலை உச்சியில் மயிர் இயற்கையாகவே கட்டையாக இருந்தது. ஆனால், பின்புறம் நீண்டு வளர்ந்து பலவகையாக அழகுபெற முடிக்கப்பெற்றிருந்தௌ. மயிர்கள் மென்மையும் பொன்மையும் வாய்ந்தவை.

கல்லில் செதுக்கப்பட்ட சிலைகளினாலும், தோலில் தீட்டப்பெற்ற ஓவியங்களினாலும் அவர்கள் மிகுதியாக அணிகலன் அணியவில்லை என்றும், தலைமுடியைப் பின்னி முடிப்பதையே பேரணியாகக் கொண்டனர் என்றும், அவ்வோர் அணியிலேதான் அவர்கள் தம் பலவகைப்பட்ட திறங்களையும் திருந்தக் காட்டினர் என்றும் அறிகிறோம்.

அவர்கள் உருண்டு நீண்ட கழுத்துடையவர்கள். சிறுமணிகளாலாகிய மாலை ஒன்றையே அவர்கள் கழுத்தணியாகக் கொண்டார்கள். காலடிகளும், கைகளும், அங்கைகளும் மிகப் பரந்திருந்ததோடு விரல்களின் எல்லாக் கணுக்களும் தடையின்றி அசையக் கூடியனவையாயிருந்தபடியால் அவர்கள் தற்கால மனிதரைவிட மிக நுண்ணிய வேலைத் திறனுடையவராயிருந்தனர்.

பெண்கள் ஆடவரைவிட உயரத்தில் சற்றுக் குறைந்தும், பருமனில் சற்றுக் கூடியும் இருந்தனர். ஆடவரைவிட அவர்கள் உருவம் வனப்புடையதாயிருந்தது என்பது எதிர்பார்க்கத்தக்கதே.

ஆடவர் முகம் பெண்டிர் முகம் போன்றே மயிர் அற்றதாய் இருந்தது. ஆனால், பெண்கள் ஒருவகை நாரினால் செய்த முகமூடி அணிந்திருந்தனர். இதன் மூலம் வெயிலின் சூடு அவர்கள் முகத்தை வாட்டாமலும், காற்று மட்டும் எளிதில் புகும்படியும் இருந்ததனால் ஆடவ்ர்களைவிட அவர்கள் முகங்கள் பொன் நிறமிக்கவையாயிருந்தன.

அவர்கள் காதுகள் இன்றைய மக்களின் காதுகளைவிடச் சிறியவையாயிருந்தன. மூக்கு மிகவும் சப்பையாகவும் பெரிதாகவும் இருந்தது. கண்கள் பெரியவை; தெளிவையும் கூர் அறிவையும் காட்டுபவை.

பொதுப்பட அவர்கள் செம்பு அல்லது பொன் நிறமுடையவர்கள். கண்கள் தவிட்டு நிறமும் மயிர் கருமை நிறமும் உடையன. பற்கள் சிறியவையாய் முத்துப்போல் ஒரே படியினவாய் வெண்மையாய் விளங்கின.

இலெமூரியாவின் இயற்கை இயல்புகள்

உலக மாறுதல்களும் இலெமூரியாக் கண்டமும்

ஞாலநூல் காலப் பகுதிகள்

குமரிக் கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா?குமரிக் கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா?

தென் இந்தியாவின் பழமைக்கான சான்றுகள்

நில நூல்களை (Geography) மேற்போக்காகப் பார்ப்பவர்களுக்குக் கூடச் செடி கொடி வகைகளிலும், உயிர் வகைகளிலும் செழித்து, மனித நாகரிகப் பழைமை வகையிலும் மிகச் சிறந்து விளங்குவது நடுக்கோட்டுப் பகுதியே (Equatorial Regions) என்பது விளங்கும். இதுவே உயிர் வகைகள் பெருகுதற்கேற்ற தட்பவெப்ப நிலைகளைச் சிறப்பு வகையிற் பெற்றுள்ளது. இப்பகுதிக்கு வடக்கிலும் தெற்கிலும் செல்லச் செல்ல உயிர் வளர்ச்சிக்குப் பலவகைச் செயற்கைத் துணைகள் வேண்டியிருப்பது தெரியவரும். உயிர்த்திரளின் வகை மிகுதிக்கும், செழித்த வளர்ச்சிக்கும், அழகமைப்பிற்கும், எண்ணிக்கைப் பெருக்கிற்கும் நடுக்கோட்டுப் பகுதியே தலைசிறந்து நிற்கின்றது.

ஸ்விஸ் நாட்டு அறிஞர் ஒருவர் நினைவூட்டுகிறபடி உலகில் மிக வடக்கில் உள்ள நாடுகளில் மரங்கள் ஐந்தடி உயரந்தானும் வளர்வது அரிது. துருவங்களண்டைப் பாசிகள் கூட மிக அருமையாகவே(அரிதாகவே) காணப்படுகின்றன. ஆனால் நம் தென் இந்தியா போன்ற நடுக்கோட்டுப் பகுதியிலோ நூறு, நூற்றிருபது அடி உயரமுள்ள மூங்கில் கூடப் புல் எனப்படுகிறது. "புறக்கா ழனவே புல்லென மொழிப" என்னும் தொல்காப்பிய உரை காண்க. மற்றும் ஆலமரம் நமக்கு ஒரு மரமே;குளிர்ந்த வடநாட்டினர் அஃது ஒரு காடு எனக் கணிப்பாராம்.

Friday, December 28, 2007

மொழிநூல் (Philology) முடிவு

மனித நாகரிகத்தின் பழமைபற்றிய செய்திகளை ஆராய்ந்து முடிவுகட்டும் வகையில் பல அறிவியற் பகுதிகள் நமக்குப் பயன்படுகின்றன. ஆயினும், முதன் முதலாக அத்துறையில் வழிகாட்டியாய் நின்றது மொழியியல் என்றே கூறவேண்டும்.

உலகிலுள்ள பல மொழிகளையும் பயின்று ஆராய்ந்து அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகள் மூலம் அவற்றைக் கோவைப்படுத்துவது மொழியியலார் போக்கு. அங்ஙனம் செய்தோர் பலரும், உலகில் தென் இந்தியா தொடங்கிப் பல பக்கங்களிலும் நெடுந்தொலை பரந்து கிடக்கும் மொழிக்கோவைகள் (Language Families) பல உள்ளன என்று கண்டனர்.

அவற்றுள் ஒன்று தென் இந்தியா முதல் இங்கிலாந்து நாட்டிலுள்ள வேல்ஸ்வரை ஒரே கோவையாய்க் கிடக்கின்றது; இக்கோவையை அறிஞர் ஆரிய இனம் என்றனர்.

இவ்வாராய்ச்சியை யொட்டிப் பலர் மனித நாகரிகம் அவ் ஆரிய இனத்தார் முதலில் இருந்த இடத்திலிருந்து ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் சென்று பரந்தது எனக் கொண்டனர். ஆரியர் முதலிடமும் இதற்கேற்ப நடு ஆசியா (Central Asia) அல்லது தென் உருசியா (Southern Russia) என்று கொள்ளப்பட்டது.

பாலகங்காதர திலகர் என்னும் வரலாற்றறிஞர், "மனிதர் முதலிடம் நடு ஆசியாவுமன்று; தென் உருசியாவுமன்று. வடதுருவப் பகுதியே(North Pole)," என்று பல சான்றுகளுடன் காட்டினர்.

இக்கொள்கை ஆரிய இனத்தைப் பற்றிய வரையில் ஒவ்வுமாயினும், மனித நாகரிகத்தின் தொடக்கத்திற்குப் பயன்படாததாயிற்று. ஏனெனில், ஆரிய இனத்தார் வந்த இட்ங்கள் பலவற்றுள் அவரினும் உயர்ந்த நாகரிகமுடைய மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பது தெளிவாகக் காணப்படுகின்றது.

கிரேக்க நாட்டில் முகைனிய (Mycaenina) நாகரிகமும் ஐகய (Aegean) நாகரிகமும் கி.மு. 3000 ஆண்டு முதல் மேலோங்கியிருந்தன. இந்தியாவில் திராவிட நாகரிகத்தின் சிறப்பை வான்மீகியார் இராமாயணமும், இருக்கு வேத உரைகளும் ஏற்கின்றன.

ஆரிய இனக்கோவையேயன்றி வேறு பல மொழிக் கோவைகளும் தென் இந்தியாவரை எட்டுகின்றன என்று மேலே கூறினோம். எனவே, நாகரிகம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஏன் சென்றிருக்கக் கூடாது என்பதும் ஆராயத்தக்க தொன்றாகும்.

மொழியியல் ஆராய்ச்சி, இத்தகையதொரு கொள்கையை எழுப்பப் போதியதாயினும் அதன் உண்மையை நிலைநாட்டப் போதிய சான்றுகளை உடையதன்று. மேலும், மொழிக்கோவைகளின் போக்கால் மொழித் தொடர்பு இருக்கிறது என்று மட்டும் சொல்ல முடியுமேயன்றி, அத்தொடர்பின் போக்குத் தெற்கினின்று வடக்கு நோக்கியதா, வடக்கு நின்றும் தெற்கு நோக்கியதா என்பதை வரையறுக்க முடியாது.

இந் நிலையிலேதான் வானநூல் (Astronomy), ஞாலநூல் (Geology), நிலநூல் (Geography), ஆவிமண்டல நூல்(Meteorology), முதலிய அறிவியற் பகுதிகள் நமக்குப் பயன்படுகின்றன. இவை யனைத்தும் ஒரே முகமாக உலகில் மிகப் பழைய பகுதியும், நாகரிகத் தொடக்கம் ஏற்பட்ட இடமும் தென் இந்தியா அல்லது அதற்கும் தெற்கில் இருந்த லெமூரியா ஆகவே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

ஆயினும் உண்மையை நிலைநாட்டும் வகையில் மொழி இயல் ஆராய்ச்சியால் ஏற்படும் துணை கொஞ்ச நஞ்சமன்று. எடுத்துக்காட்டாக இந்தியாவில் ஆரியர் நாகரிகத் தாக்கு மிகவும் குறைவு; திராவிடர் நாகரிகத்துக்கே பெரும்பான்மை என்பதை, அண்மையில் சிந்து நாட்டில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் காட்டுவதற்கு முன்னமே, தெளிவுபட உணர்த்தியது மொழியியலே.

"கற்காலம்"(Stone Age) என்ற தலைப்புக் கொண்ட நூலில் திரு. பி.டி. சீனிவாச ஐயங்கார் அவர்கள், "மொழி ஒப்புமையால் நோக்கத் தென் இந்திய மொழிகள் மட்டுமல்ல; வட இந்திய மொழிகளும், வடமொழியுங்கூடச் சொற்பயன், சொற்றொடர் அமைப்பு முதலிய வகைகளில் ஒன்று போலவே இருக்கின்றன. இம் மொழிகளுள் ஏதாவதொன்றினின்றும் இன்னொன்றுக்கு மொழிபெயர்க்க வேண்டுமாயின் அகர வரிசையின் துணைகொண்டு மொழிக்கு மொழி மாற்றினால் போதும்", என்று கூறுகிறார்.

இவ் வகையில் வட இந்திய மொழிகள் பிற ஆரிய மொழிகள் போலாமை நோக்க, அவற்றின் அடிப்படைச் சட்டம் வடமொழியோ ஆரியமோ அன்று; பழந்தமிழ் அல்லது திராவிட மூல மொழியேயாகும் என்பது வெள்ளிடைமலை. இன்னும் சற்று நுணுகி நோக்கினால் வட நாட்டார் தம் மூலமொழி எனக் கொண்ட வடமொழிதானும் திராவிடத்தாக்கு உடையதே என்பது தெரியவரும்.

மேலும் மொழியியலின் தந்தை என்று புனைந்து கூறப்படும் பேரரறிஞர் கால்டுவெல் (Caldwell) அவர்கள் திராவிட மொழிகள் சித்திய (Scythian) மொழிகளுடன் இன்றியமையா உறவுடையது என்று கூறுகிறார். அஃதாவது நான்காம் ஆறாம் வேற்றுமை உருபுகள், உளப்பாட்டுத் த்ன்மைப் பன்மை, எதிர்மறைவினை, தழுவும்சொல் முந்தி நிற்றல், எச்சங்களே உரிச்சொல்லாக நிற்றல், வினைத் தொடர்ச்சியினிடமாக எச்சங்களையாளுதல், உயிரிடைப்பட்ட வன்மை திறந்த உயிர்ப்புடைய மென்மை இனமாக மாறி ஒலித்தல், நாவடி மெய்களாகிய ட ண ள உடைமை, சுட்டு, எண், இடப்பெயர் முதலியவை இம் மொழிகளுள் ஒற்றுமை யுடையவையாகக் காணப்படும். சித்திய இனம் ஆசியா ஐரோப்பா முழுமையிலும் பரந்து கிடப்பதால் திராவிட இனத்தின் தொடர்பும் இவ்விரு கண்டங்களையும் தழுவியுள்ளதென்று பெறப்படுகிறது.

பேரறிஞர் போப்பையர் (G.U.Pope), "தமிழ், ஐரோப்பிய மேலை நாடுகளில் உள்ள கெல்த்திய (Celtic) மற்றும் தெயுத்தானிய (Teutonic) மொழிகளை ஒத்திருக்கின்றது என்கிறார். இவ்விரண்டு இனங்களும் ஆரிய இனத்தின் மிகத் தொலைவுக் கிளைகள் என்பர். இன்னும் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, அமெரிக்க மொழிகளும் வியத்தகு முறையில் தமிழ்க்குழுவை ஒத்துள்ளன" என்று அறிஞர் கூறுகின்றார்.

இதனால் தமிழ்க்குழு உலக முழுமையும் உறவுடையது எனப் பெறப்படுகின்றது.

Saturday, December 15, 2007

குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு

பன்மொழிப்புலவர்
கா.அப்பாத்துரை, எம்.ஏ., எல்.டி

பொருளடக்கம்
௧. குமரிநாடு பற்றிய தமிழ்நூற் குறிப்புக்கள்
௨. மொழிநூல் முடிவு
௩. தென் இந்தியாவின் பழமைக்கான சான்றுகள்
௪. குமரிக் கண்டம் (லெமூரியாக் கண்டம்) என்ற ஒன்றிருந்ததா?
௫. ஞாலநூல் காலப் பகுதிகள்
௬. உலக மாறுதல்களும் இலெமூரியாக் கண்டமும்
௭. இலெமூரியாவின் இயற்கை இயல்புகள்
௮. இலெமூரிய மக்களது நாகரிகம்
௯. தற்கால நாகரிகமும் இலெமூரியரும்
10. இலெமூரியாவும் தமிழ்நாடும்

௧. குமரிநாடு பற்றிய தமிழ்நூற் குறிப்புக்கள்

இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம்(இன்றைய திருப்பதி) முதல் கன்னியாகுமரி வரை பரந்து கிடக்கின்றது. இதில் இன்றைய அரசியல் பிரிவுப்படி ஏறக்குறைய பத்துக் கோட்டங்கள்(தற்போது 30 மாவட்டஙகள்) அடங்கியுள்ளன. ஆனால், முன் நாட்களில் தமிழ்நாட்டின் பரப்பு இதனினும் பன்மடங்கு மிகுதியாக இருந்ததென்று கொள்ளச் சான்றுகள் பல உள்ளன.

மிகப் பழைய இலக்கணங்களிலும், நூல்களிலும், உரைகளிலும் குமரிமுனைக்குத் தெற்கே நெடுந் தொலை நிலமாயிருந்தது என்றும், அந் நிலப்பகுதி பல்லூழிக் காலம் தமிழ்நாட்டின் ஒரு கூறாயிருந்து பின் படிப்படியாகக் கடலுள் மூழ்கிவிட்டதென்றும் ஆசிரியர்கள் உரைக்கின்றனர்.

இப் பரப்பிலிருந்த நாடுகள், அரசுகள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புக்களும், விவரங்களும் சிலப்பதிகாரம், புறநானூறு முதலிய பழைய நூல்களில் காணப்படுகின்றன. அங்கிருந்த மலைகளுள் குமரி மலை ஒன்று என்றும், ஆறுகளுள் குமரி, பஃறுளி இவை தலைமையானவை என்றும் தெரிகின்றன.

இந் நாடு தமிழகத்தின் ஒரு பகுதி மட்டுமன்று; தமிழரினம், தமிழ் நாகரிகம் என்பவற்றின் தாயகமே என்று கூற வேண்டும்.ஏனெனில், தமிழைத் தொன்று தொட்டு வளர்த்த சங்கங்கள் மூன்றனுள், தலைச் சங்கம் நடைபெற்ற தென்மதுரையும் இடைச்சங்கம் நடைபெற்ற கவாடபுரமும் இக் குமரிப் பகுதியிலேயே இருந்தன.

எனவே, தலைச்சங்க காலமாகிய முதல் ஊழியிலும்(ஊழி என்றால் நெடுங்காலம் என்று பொருள்) இடைச்சங்க காலமாகிய இரண்டாம் மூன்றாம் ஊழிகளிலும் இக்குமரிப் பகுதியிலேயே தமிழர் ஆட்சியும் நாகரிகமும் மொழி வளர்ச்சியும் ஏற்பட்டன என்பதும், தெற்கிலிருந்து கடல் முன்னேறி வரவர அவர்கள் வடக்கு நோக்கிப் பரந்து சென்றனர் என்பதும் விளங்குகின்றன.

தமிழ் நூல்களில் மூன்று கடல் கோள்களைப் பற்றித் தெளிவான குறிப்புக்கள் காணப்படுகின்றன.

முதல் கடல்கோளால் பஃறுளியாறும் குமரிக்கோடும் கடலில் கொள்ளப்பட்டன. ப்ஃறுளியாற்றின் கரையிலிருந்த தென்மதுரையே பாண்டியன் தலைநகரும், தலைச்சங்கம் இருந்த இடமும் ஆகும். இக்கடல்கோள் நிகழ்ந்த காலத்திருந்த பாண்டியனே நெடியோன் என்று புறநானூற்றிலும், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்று தொல்காப்பியப் பாயிரச் செய்யுளிலும் குறிக்கப்பட்டவனாவன்.

கடல்கோளின் பின்னர் இவன் வடக்கே போய்க் கவாடபுரத்தைத் தலைநகராக்கிக் கொண்டான். இங்கே தான் இடைச் சங்கம் நடைபெற்றது.

தலைச்சங்க நாட்களில், பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடைப்பட்ட பகுதி, அளவிலும் சிறப்பிலும் பாண்டி நாட்டின் மிகச் சிறந்த பாகமாயிருந்திருக்க வேண்டும். அது 49 நாடுகளாக வகுக்கப்பட்டிருந்ததென்றும், இரண்டு ஆறுகட்குமிடையே 700 காவத(ஒரு காவதமென்றால் ஏறக்குறைய ஒரு மைல், 700 மைல்கள்=1125கி.மீ) அளவு அகன்று கிடந்ததென்றும் அறிகிறோம்.

இரண்டாவது கடல்கோளால் கவாடபுரம் கடல் கொள்ளப்பட்டது. அதன்பின் சிலகாலம் மணவூர் பாண்டியன் தலைநகரமாக இருந்தது. பின் மூன்றாம் முறைக் கடல்கோளால் அம் மணவூறும், குமரியாறும் அழியவே, பாண்டியன் மதுரை வந்து அங்கே கடைச் சங்கத்தை நிறுவினான்.

சிலப்பதிகாரத்தில் மாடலன் குமரியாற்றில் நீராடியதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், கதை முடிந்தபின் எழுதப்பெற்ற பாயிரத்தில் தொடியோள் பௌவ மெனக் குமரிக் கடலாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு காலப்பகுதிகளுக்கிடையே, அஃதாவது கோவலனிறந்து சில நாட்களுக்குப் பின்னாகக் குமரியாறு கடல் கொள்ளப்பட்டுக் குமரிக் கடலாயிற்று என்பர் பேராசிரியர்.

குமரியாறு கடலுள் அமிழ்ந்த காலத்தை ஒட்டியே மணிமேகலையுட் கூறப்பட்டபடி காவிரிப்பூம்பட்டினம் கடல் வயமானது. வங்காளக் குடாக்கடலில் உள்ள சில பெரிய தீவுகளும் இதனுடன் அழிந்திருக்க வேண்டும். "நாகநன் னாட்டு நானூ றியோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்" என்றது காண்க.

இதனோடு, மேற்குத் தொடர்ச்சிமலை இன்று கடலிருக்கும் இடத்திலும் தொடர்ந்து கிடந்ததென்றும், ஆண்டு அதற்கு மகேந்திரம் என்பது பெயர் என்றும் வடநூல்கள் கூறுகின்றன. இராமயணமும் அனுமான் கடல்தாண்டியது மகேந்திர மலையிலிருந்தே யென்றும், அது பொதிகைக்கும் கவாடபுரத்திற்கும் தெற்கிலிருந்ததென்றும் விவரித்துரைக்கின்றது.

முருகன் சிவன் முதலிய தமிழ்த் தெய்வங்கள் மகேந்திர மலையில் உறைந்தனர் என்றே தமிழர் முதலில் கொண்டனர். கடல்கோளின் பின்னர் அவர்களது இடம் அன்றைய தமிழ்நாட்டின் வடக்கில் இருந்த மேலைத் தொடர் என்று கொள்ளப்பட்டு, வடமலை ஆயிற்று. நாளடைவில் வடமலை என்பதே மேருமலை என்றும் கயிலை என்றும் கருதப்பட்டது. சிவதருமோத்தரத்தில் குறிப்பிட்டுள்ள உன்னதத் தென் மயேந்திரம் இதுவே என்க. திருவாசகத்தில்,

"மன்னு மாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்"

என்று இதனையே மணிவாசகப் பெருந்தகையார் ஆகம்ங்கருளிய இடமாகக் குறிப்பிடுகின்றார்.

தமிழ்நாட்டின் தென்கரை மட்டுமன்று, அதன் கீழ்க்கரையும் இலங்கையுங் கூடப் பல் சிறு கடல்கோள்களுக்கு உட்பட்டன என்று தோன்றுகிறது. வடமொழி வானநூலார் தமது உலக நடுவரையை இலங்கையில் ஏற்படுத்தினர். ஆனால், இன்று அஃது இலங்கை வழிச் செல்லாமல் கடலூடு செல்வதிலிருந்து, அந்த இடம் முன்பு இலங்கையைச் சார்ந்திருந்ததென்று உய்த்துணரக் கிடக்கின்றது.

மேலும் கேள்வியறிவால் தென் இந்தியாவைப் பற்றி எழுதும் மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் இலங்கையைத் தாப்பிரபனே என்று கூறுவதுடன் அஃது இந்தியாவினின்று ஓர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கின்றார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநையாறு கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்க வேண்டும் என்றேற்படும்.

கந்தபுராணத்தில் சொல்லப்படும் வீரமகேந்திரம் இலங்கையின் தெற்கே பல கடல்கோள்களுக்குத் தப்பிக் கிடந்த ஒரு சிறு தீவேயாகும்.

கிழக்குக் கரையில் காவிரிப்பூம்பட்டினமேயன்றி வேறு பல தீவுகளும் அழிந்தன என்று மேலே கூறினோம். புதுச்சேரிக்கு மேற்கே பாகூர்ப்பாறையிலுள்ள கல்வெட்டில் அது கடலிலிருந்து நாலுகாதம் மேற்கே இருப்பதாகக் குறிப்புக் காணப்படுகிறது. ஆனால், இன்று அது கடலிலிருந்து ஒரு காதமே விலகியிருப்பதால் கடல் மூன்று காதம் உட்போந்ததென்பது விளங்கும்.

சீகாழி, தோணிபுரம் என்றழைக்கப்படுவதும், மதுரைவரை ஒருகால் கடல் முன்னேறி வர, பாண்டியன் வேல் எறிந்து அதனை மீண்டும் சுவறச் செய்தான் என்ற திருவிளையாடற் கதையும், கன்னியாகுமரியில் இன்று உள்ள மூன்று கோயில்களும் ஒன்று கடலுள் மூழ்கி அழிந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுவதும் தமிழ்நாட்டுள் கடல் பலகால் புகுந்து அழிவுசெய்ததென்பதைக் காட்டுவனவாகும்.

மேலும் கேள்வியறிவால் தென் இந்தியாவைப் பற்றி எழுதும் மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் இலங்கையைத் தாப்பிரபனே என்று கூறுவதுடன் அஃது இந்தியாவினின்று ஓர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கின்றார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநையாறு கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்க வேண்டும் என்றேற்படும்.

கந்தபுராணத்தில் சொல்லப்படும் வீரமகேந்திரம் இலங்கையின் தெற்கே பல கடல்கோள்களுக்குத் தப்பிக் கிடந்த ஒரு சிறு தீவேயாகும்.

கிழக்குக் கரையில் காவிரிப்பூம்பட்டினமேயன்றி வேறு பல தீவுகளும் அழிந்தன என்று மேலே கூறினோம். புதுச்சேரிக்கு மேற்கே பாகூர்ப்பாறையிலுள்ள கல்வெட்டில் அது கடலிலிருந்து நாலுகாதம் மேற்கே இருப்பதாகக் குறிப்புக் காணப்படுகிறது. ஆனால், இன்று அது கடலிலிருந்து ஒரு காதமே விலகியிருப்பதால் கடல் மூன்று காதம் உட்போந்ததென்பது விளங்கும்.

சீகாழி, தோணிபுரம் என்றழைக்கப்படுவதும், மதுரைவரை ஒருகால் கடல் முன்னேறி வர, பாண்டியன் வேல் எறிந்து அதனை மீண்டும் சுவறச் செய்தான் என்ற திருவிளையாடற் கதையும், கன்னியாகுமரியில் இன்று உள்ள மூன்று கோயில்களும் ஒன்று கடலுள் மூழ்கி அழிந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுவதும் தமிழ்நாட்டுள் கடல் பலகால் புகுந்து அழிவுசெய்ததென்பதைக் காட்டுவனவாகும்.

தலை இடை கடைச்சங்கங்களில் இன்னின்ன புலவர்கள் இருந்தனர், இன்னின்ன நூல்கள் செய்தனர், இன்ன இலக்கணம் கையாளப்பட்டது என்ற விவரங்கள் இறையனாரகப் பொருளுரையிலும், பிற நூல்களிலும் கூறப்படுகின்றன.

கடல்கோள்கள் காரணமாகவும், போற்றுவாரற்றும் அந்நாளைய நூல்களுள் பல இறந்துபட்டன. கடைச் சங்கப் புலவர்கள் காலத்திலும், ஏன், பிந்திய நாட்புலவர்கள் காலத்திலும் கூட, இவற்றுட் பல நூல்கள் முழுமையாகவோ, பகுதியளவிலோ நிலவியிருந்தன என்பது அவர்கள் குறிப்புக்களாலும் மேற்கோள்களாலும் அறியக் கிடக்கின்றன.

இங்கனம் தலைச்சங்க இடைச்சங்க நூல்கள் மிகுதியாக அழிந்துபோக, நமக்கு இன்று மீந்துள்ளது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலொன்றேயாகும். அகத்தியம் முதலிய வேறு பல நூல்களுக்கு மேற்கோள்கள் வாயிலாகச் சில சில பாக்களோ அல்லது குறிப்பு வாயிலாகப் பெயர் மட்டிலுமோ கிடைக்கின்றன.

ஆன்றோர் உரையும், முன்னோர் மரபும் இங்ஙனம் தெளிவாகச் சங்கங்ககது வரலாற்றையும் குமரிநாட்டின் மெய்ம்மையையும் வலியுறுத்துகின்றன; ஆயினும் இக்காலத்தார் சிலர் இவற்றை ஐயுறத் தொடங்குகின்றனர். இந்நூல்களில் சங்கங்கள் நடைபெற்றதாகக் கூறும் கால எல்லை ஆயிரக்கணக்காயிருப்பதும், அவை தரும் நூற்பட்டிகைகள் பெரும்பாலன இன்று காணப்பெறாமையுமே இவ்வையப்பாட்டிற்குக் காரணமாவன.

தமிழ் நாகரிகத்தின் தொன்மையைக் கணித்தறிவார்க்கு இச்சங்க வாழ்வின் எல்லை அவ்வளவு நம்பத் தகாததன்று. இன்று வடநாட்டில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ முதலிய இடங்களில் கண்ட கல்வெட்டுக்களால் தமிழர் நாகரிகம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னரேயே இந்தியநாடு முழுவதும் பரவியிருந்தது என்பது புலனாகின்றது.

அதோடு அவற்றைப் பற்றிய குறிப்புக்கள் காலத்தாலும் இடத்தாலும் பிரிக்கப்பட்ட வேறுவேறான பல நூல்களிலும் ஒன்றுக்கொன்று முரணாகாமல் பொருத்தமாகவே கூறப்பட்டிருக்கின்றமையும், தமிழ் நூல்களேயன்றி வடநாட்டு நூற்குறிப்புகளும் பண்டைய கிரேக்க அறிஞர்தங் குறிப்புகளும் சங்க வரலாற்றைப் பல இடங்களில் வலியுறுத்துகின்றமையும், தற்கால மேனாட்டு ஆராய்ச்சியுரைகளும், கண்கூடான பல நடைமுறையறிவுகளும் சேர்ந்து இச்செய்தி வெறும் புனைந்துரையன்று, மரபு வழக்காக வந்த மிகப் பழமையானதொரு செய்தியே என்பதை மெய்ப்பிக்கும்.

வடமொழிச் சான்றுகளுட் சிலவற்றை முன்பே குறிப்பிட்டுள்ளோம். அவற்றுள் மறுக்கக்கூடாத தெளிவான சான்று முதல் கடல்கோள் பற்றியதாகும். அக்கடல்கோளுக்குத் தப்பிநின்று திரும்பத் தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டிய நிலந்தரு திருவிற் பாண்டியனை திராவிட நாட்டரசனாகிய சத்திய விரதனென்றும், அரச முனி என்றும், மனு என்றும் வடநூல்கள் பலவாறாகக் கூறின.

ஊழி வெள்ளத்தினின்றும் தப்பி அவனது பேழை தங்கிய இடம் பொதிகைமலை ஆகும். இதனையே வடமொழியாளர் மலையமலை என்பர். இஃது அன்றையப் பாண்டியன் பெரும்பகுதிக்கும் வடக்கே இருந்ததால் வடமலை எனப்பட்டுப் பின் பெயர் ஒற்றுமையால் மேருவுடன் வைத்தெண்ணப்பட்டது.

இவ்வெள்ளக் கதைகள் பல புராணங்களிலும் காணப்படுபவை. அன்றியும் இராமாயணத்தில் இரண்டாம் ஊழியில் மணிகளாலும் முத்துக்களாலும் நிரம்பப் பெற்றுச் சிறப்புடன் விளங்கிய பாண்டியன் தலைநகரான கவாடபுரத்தைப் பற்றியும், மகாபாரதத்தில் அதன்பின் மூன்றாம் ஊழியில் தலைநகராயிருந்த மணவூரைப் பற்றியும் விவரிக்கப்பட்டிருப்பதுங் காண்க.

இங்ஙனம் இயற்கைச் சான்றுகளும், தென்மொழி வடமொழி மேற்கோள்களும் ஒரே முகமாக நிலை நாட்டும் இவ்வுண்மையை எளிதில் மறுக்கவோ, புறக்கணிக்கவோ இயலாது.

பின்வரும் பிரிவுகளில் மேல்நாட்டறிஞர் பல வேறு ஆராய்ச்சித் துறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து இதே முடிவை ஏற்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டுவோம்.